Sunday, March 08, 2015

கீதா ராணி இவர் இருநூறு வாயில்லா குழந்தைகளின் தாய்

" எதற்கும் ஒரு எல்லை உண்டு ;
ஆனால் அன்பிற்கு இல்லை எல்லை ".



நம் ஊர்  சாலையில் அன்றாடம் சொறி பிடித்த நாய்களையும், ஊளையிட்டுக்கொண்டுச் சுற்றித் திரியும் நாய்களையும் கடக்காமல் நாம் ஒரு இடத்திற்கு செல்ல முடியவே முடியாது. சில சமயம் பலர் அந்த நாய்களை கல்லெடுத்து அடிப்பதையும் கூட நாம் பார்த்திருப்போம். அப்படிப் பார்க்கும் போது நம்மால் பரிதாபம் மட்டுமே படமுடிகிறது. ப்ளூகிராஸ் அமைப்புகள் என்று நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் என்றாவது நேரில் பார்த்திருப்போமா? அல்லது அந்த அமைப்பின் தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளத்தான் முயன்றிருக்கின்றோமா...?

ஆனால் கோவையின் அருகேயுள்ள  காரமடை அருகே பெரியமத்தம்பாளையத்தில் கீதா ராணி 58  என்னும் பெண்மணி (தனியார் அமைப்பு) சாலையோரம் சுற்றித்திரியும் 200 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவருடைய குழந்தையை போலவே பாவித்து பராமரித்து வருகிறார் . இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களின் சிறப்பு சந்திப்பு பேட்டி உங்கள் பார்வைக்கு.

தாய் தந்தையின் அன்பு காணாது வளர்ந்தவர் தான் கீதா ராணி. திருமண வாழ்விலும் தனது பொறுப்பில்லாத கணவரால் ஏமாற்றங்களுக்கும், பல அவமானங்களுக்கும் உள்ளானவர். எப்படியாவது தனது குழந்தைகளை ஆளாக்கி திருமணம் முடித்தாக வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையை ஏற்று செவ்வனே நிறைவேற்றிய பின், ' மனிதர்கள் என்றாலே இப்படித்தான் ' என்று வாயில்லா ஜீவன்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து கடந்த பத்து வருடங்களாக 'ஸ்னேகாலயா' என்ற பிராணிகள் காப்பகத்தை நடத்தி வருகிறார் .

 

இங்கே நேரில் சென்று பார்த்தபோது மனிதர்கள் தான் பலர் ஆதரவை தொலைத்துவிட்டு காப்பகங்களில் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்று நினைத்தால் .  இங்கு உள்ள எண்ணற்ற வாயில்லா ஜீவன்களும் அதே அன்புக்குத்தான் ஏங்குகின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. 'ஸ்னேகாலயா' நிறுவனர் அன்பின் கடவுளாக திகழும் கீதா ராணி அவர்கள் கூறும் பொழுது, " மனிதர்களைப் போல தாங்க இந்த குழந்தைகளும் முழுக்க முழுக்க அன்புக்கு அடிமையாகி விடுவாங்க. இந்த குழந்தைகளுக்கு நல்லாவே தெரியும்ங்க நல்லவர்கள் யார் உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்கள் யார் என்று... பாருங்க நீங்க இங்க இருக்கீங்க எல்லா குழந்தைகளும் உங்களை வரவேற்கதான் சத்தம் போடறாங்க யாரும் கடிக்க மாட்டாங்க.

பலரது வீட்டில் இந்த குழந்தைகள் செல்லமாக வளர்ந்தவை தாங்க கொஞ்சம் நோய் வாய்ப்பட்டு விட்டால் எங்களிடம் கொடுத்து விடுவார்கள். அல்லது சாலையில் விட்டுவிடுவார்கள். சாலையில் விட்ட குழந்தைகள் தனது எஜமானை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களைத் தேடிப்போவாங்க ஆனால் அந்த எஜமானர்கள் எப்படியோ எங்களது முகவரியை தேடி இவைகளை அழைத்துப் போகச் சொல்லுவாங்க. நாங்க மறுக்க மாட்டோம் சரி என்று நேரில் சென்று வாயில்லா குழந்தையை அன்போடு அழைத்து வந்து அவைகளுக்கு வைத்தியம் செய்து பராமரிப்போம்.




நான் அழகுக் கலை பயின்றுள்ளேன். என்னுடைய மகளுக்கும் அதை கற்றுக்கொடுத்து ஒரு அழகு நிலையம் வைத்துக் கொடுத்துள்ளேன். அதில் வரும் சம்பாத்தியத்தில் பாதியை இந்த குழந்தைகளுக்காக கொடுத்துவிடுவாள். அவளைப் போலவே, என் மருமகளும் அழகு கலை நிபுணராக இருப்பதால் அழகு நிலையம் வைத்திருக்கிறாள். அவளும் உதவி செய்கிறாள். அது மட்டும் இல்லாமல் எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அவ்வப்போது நிதி உதவி கொடுக்கிறார்கள் அதனால் இந்த 200 குழந்தைகளுக்கும் வைத்தியம், உணவு, பராமரிப்பு இடம் எல்லாமே முழுமையாக கிடைக்கிறது. என்னுடைய இலட்சியம் எல்லாம் கோவையில் ப்ளுகிராஸ் இல்லைங்குற குறை இல்லாமல் அதை முழுமையாக நடத்தவேண்டும். வாயில்லா ஜீவன்களை வதைக்காமல் தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் " என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது, " கோவையைச் சுற்றி உள்ள எந்த இடத்திலாவது  இப்படி வாயில்லா குழந்தைகள் தவிப்பதை பார்த்தால் 8870207443 என்ற என்னுடைய அலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்தால் நாங்கள் எங்களது பணியாளருடன் நேரில் வந்து குழந்தைகளை அழைத்து செல்கிறோம் " என்றார்.



கீதா ராணி அவர்களிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருக்கும் நாய்களை அவர்கள் அன்போடு எங்கள் குழந்தைகள் குழந்தைகள் என்று அழைப்பதை பார்க்கும் பொழுது . அந்த வாயில்லா ஜீவன்களை எந்நாளும் நாய் என்று கூற மனம் வரவில்லைங்க.

இன்று மகளிர் தினம் இப்படிப்பட்ட அன்பின் சொரூபமான பெண்களை நாம் போற்றாமல் இருக்க முடியுமா..?
கீதா ராணி அம்மாவுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!!
உங்களால் எல்லா பெண்களும் பெருமையடைகிறார்கள்..!

~ மகேந்திரன்




மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment