Sunday, November 24, 2013

பிணவறை உழைப்பாளிகள்




"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" ~ குறள் 1035

"தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

இந்த குறளுக்கு ஏற்ப தொழில் செய்து வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர். கைத்தொழில் செய்பவர், சிறு தொழில் முனைவோர், சொந்த தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் , எல்லாம் நாம் நினைத்ததுபோல அமைவது இல்லை , தமக்கு வாய்த்த விதிப்படி தொழிலை அமைத்துக்கொண்டு செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்தும் அதில் வரும் வருவாயைப் பொறுத்துமே இந்த சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அழகான உடைகள் அணிந்து கொண்டு, காரில் மிடுக்காய் வேலைக்கு செல்பருக்கு ஒரு விதமான மரியாதை என்றால், சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளிக்கு அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதை தான் கிடைக்கிறது.

" பிணவறை பணியாளர்கள் " இவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை .

நமக்கென தருணம் வரும் வரை இப்படி சற்றும் நம் கவனத்திற்கு வராதவர்கள் தான் இந்த பிணவறையில் வேலை செய்யும் பணியாளர்கள். தமது உறவினர் இறந்தாலே அந்த உடலை பார்ப்பதற்கு பலருக்கு பயம், இறப்பு செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்கு சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலை தொடவோ அல்லது பார்ப்பதற்க்கோ கூட சிலர் அச்சப்படும் நிலையும் இருக்கிறது. இப்படி இருக்க சடலங்களை குவித்து வைத்திருக்கும் கிடங்கு என்றால் எப்படி இருக்கும், அந்த கிடங்கில் சடலங்களை கையாளும் உழைப்பாளி மனிதர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை.

அந்த உழைப்பாளிகள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்.

பிணவறை வேலை செய்பவர்கள் என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும் என்ன ? பத்து மாதம் கருவில் சுமந்த தாயாயினும் என்ன ?உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை , இந்த உழைப்பாளிகள் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து
போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள் . அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள் . தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால் , சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை
கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணியும் இவர்களைல் சிலர் சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம் . நாற்றத்தை சமாளிக்க மது அருந்த காரணம் தேடும் துப்புரவு தொழிலாளிகள் மத்தியில் இப்படி பிணங்களை தூய்மைபடுத்தும் சிலர் மதுவை தொடாதவர்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

பொதுவாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது இவர்கள் மருத்துவ வளாகங்களை சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களாகவே சேர்க்கப்படுகின்றனர். பின்னர் சடலங்களை கையாள்வது , அப்புறப்படுத்துவது போன்றவையும் மருத்துவ துறையில் துப்புரவு பணிகளில் ஒன்றே என்பதை புரிந்து கொண்டு அதைச் செய்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. காரணம் வருமானத்திற்கு வேறுவழி இல்லை என்கிறார்கள் அதுவும் இல்லாமல் இந்த பணியிலும் ஒரு ஆத்மார்த்தத்தைக் காண்கிறார்கள். புதிய தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகி கொள்கிறார்கள். தினமும் சடலங்களுடன் இருப்பதால் பேய் பிசாசு, மரணம், பற்றிய பயம் இவர்களுக்கு அறவே இல்லை.

துப்புரவுத் பணியாளர்கள் என்று வெளியே சொல்லிகொண்டாலும் மருத்துவமனையில் இப்படி சடலங்களை கையாளும் வேலையை தாங்கள் செய்வதாக ஒரு நாளும் வெளியில் சொல்லுவதில்லை. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட இவர்கள் தாங்கள் செய்யும் வேலையை பற்றி சொன்னதில்லை. ஏனென்றால் சடலங்களை சடலங்களை கையாளுகிறார்கள் என்று தெரிந்தால் மனைவி மக்கள் பக்கத்தில் வரக் கூட யோசிப்பார்கள் என்ற காரணமே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் கூட இவர்கள் செய்யும் தொழில் பற்றி தெரிந்தால் உடனே பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தால் இவர்கள் தங்களை பிணவறை பணியாளராக சொல்லிக்கொள்வது இல்லை . அப்படி இவர்களைப் பற்றி தெரிந்த சிலர்கள் சடலங்களுடன் பழகும் ஒரு கொடுரமான மனிதனாகவே இவர்களை சித்தரிக்கிறார்கள் . இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வேலை செய்யும் இவர்களை எப்படி பாராட்டுவது என்று நாம் வியந்து பாராட்டினாலும் இவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்கள் , குழந்தைகள், விபத்தில் உயிர் இழந்த சடலங்களை இவற்றைப் பார்க்கும் போது மனம் வருத்தப்படும் இவர்கள் வயதானவர்களின் சடலங்கள் வந்தால் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் . ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை கிடங்கிலேயே மாதக்கணக்கில் இருக்கும் அப்படிப்பட்ட சடலங்களை தினமும் பார்த்து "உனக்கென்று முழு விடுதலை எப்போது வரும் என்ற ஏக்கமும் வேண்டுதலும் இருக்கிறது இவர்களுக்கு" அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறார்கள். வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் இவர்கள் யாரிடமும் வற்புறுத்திப்
பணம் கேட்பதில்லை. விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். ஆதரவற்ற சடலங்கள் வரும்போதும் அதை நல்லடக்கம் செய்யும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த உடலின் ஆத்மாக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். சடலங்களுடனும் ரத்தங்களுடனும் வாழ்ந்து பழகியதால் இவர்கள் அந்த சடலங்கள் இருக்கும் இடத்தில் தான் உணவும் உண்கிறார்கள் . தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்க்க அவர்கள் கூறும்போது, இறந்த உடலை அன்றே கையாள்வதுதான் ஆபத்து , ஒருவர் இறந்து குறைந்தது மூன்று நாட்களுக்குள் அந்த உடலில் இருக்கும் தோற்று நோய்க் கிருமிகளும் இறந்து விடும் புதிய கிருமிகள் தோன்ற மேலும் சிலநாள் ஆகும் அதற்குள் அந்த உடலை கையாண்டுவிடலாம் என்கிறார்கள்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள் சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை
தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். இவர்கள் தொடும் ஒவ்வொரு உடலின் ஆத்மாக்களும் அவர்களது உறவினர்களை ஆசிர்வதிக்கிறதோ இல்லையோ இவர்களை நிச்சயம் ஆசிர்வதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட "பிணவறை பணியாளர்கள் " இல்லை என்றால் நாம் கட்டி அணைத்து அழ நமக்கு நம் சொந்தங்களின் உடல் முழுமையாக கிடைக்காது . அனால் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது வேலை போகும் என்று அச்சத்துடன் வாழும் இவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது தான். எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் நாம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர எண்ண வேணாமா..?

~மகேந்திரன்

"மயான தொளிலாளியையும் அவர்களின் ஆத்மார்த்தமான பணிகளைப்பற்றியும் எழுதிய நான்
"பிணவறை பணியாளர்கள்' அவர்களோடும் அவர்களுடைய உணர்வுகளையும் உடன் இருந்து
அறிந்து எழுதியது இந்த கட்டுரை.

அவர்களைக்கண்ட பிறகு ஒன்று மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

"முற்றுப்புள்ளிக்கு முகவரிதரும்
இந்த
மனிதர்களைப் பற்றி அறிந்தால்
தொடர் புள்ளிக்கு பின்னால்
போடும் ஆட்டங்கள்
சீர்ப்படுதப்படும் "







மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

Unknown said...

வலித்தாலும் சிறப்பு. இது பற்றி நான் ஒரு கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். ஆதாரங்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது உபயோகமான தகவல் இருந்தால் கொடுத்து உதவுங்கள்.

Anonymous said...

படித்து முடித்தவுடன் மனம் கனத்து கிடக்கிறது. கட்டுரைக்கு நன்றி ....

Kesavan said...

உண்மையான உழைப்பாளிகள்!!!

Post a Comment