Thursday, May 09, 2013

காயம் ~ கதை

“ரொம்ப வலிக்கிது அம்மா”.

கண்களில் கண்ணீர் மல்கத் தன் காலில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கூறினாள் அமுதா.
"கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம். சீக்கிரம் ஆறிடும்" என்று மகளைத் தேற்றினாள் அம்மா.
அப்போது வீட்டு  வாசலில் வந்து நின்ற நண்பரை வரவேற்றார் அப்பா. உபசரிப்பை ஏற்ற நண்பர்  “வீடு ரொம்ப சுத்தமா இருக்கு. பிள்ளைகளும் ரொம்ப மரியாதையா நடந்துக்குறாங்க. பிள்ளைகளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறீங்க சார்” என்று பாராட்டினார்.
அப்பாவின் கண்களில் பெருமிதம். “ஆமாம் சார்...    என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சைத் தட்டவே மாட்டாங்க. நான் அவங்களை ரொம்ப ஒழுக்கமா வளர்த்திருக்கேன்” என்று கூறினார்.
தன் வளர்ப்பின் சிறப்பினை மேலும் எடுத்துரைக்க அமுதாவை அழைத்தார் அப்பா. " அமுதா... இங்கே வா" என்று கூப்பிட்டார். அப்பாவின் குரல் கேட்டதும் வேகமாய் அவர் முன் தோன்றினாள் அமுதா. “பாத்தீங்களா சார்... கூப்பிட்ட குரலுக்கு உடனே என் பிள்ளைங்க வந்து நிப்பாங்க” என்று பெருமையாய்க் கூறினார் அப்பா. மேலும் அவளிடம் 'போய்  உன்னோட இங்கிலீஷ் நோட்ட எடுத்துக்கிட்டு வா” என்று கூறினார். அப்பாவின் கட்டளையை கேட்டதும் காற்றாய்ப் பறந்தாள்  அமுதா. உடனே தன் அறைக்கு வேகமாய் சென்று தன் புத்தகங்களை புரட்டி அப்பா கேட்ட ஆங்கில நோட்டு புத்தகத்தை தேடினாள். “இப்போ ஏண்டி இப்படி அவசரப்படுற? பொறுமையா தேடு. ஏன் என் புக்ஸ் எல்லாம் கலைக்கிற?” என்று அக்காவை திட்டினாள் இலக்கியா. அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் மீண்டும்  வேகமாய் சென்று அப்பாவின் முன் நின்றாள் அமுதா.
புத்தகங்களை வாங்கி புரட்டி பார்த்த நண்பர்.. "அடடா... கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கே" என்று அமுதாவை பாராட்டினார். “இருக்காத பின்ன .. என் வளர்ப்பு அப்படி”  என்று நண்பரிடம்  பெருமையாக சொன்னார் அப்பா. சிறிது  நேரம் பேசிவிட்டு நண்பர் விடை பெற்றுக்கொண்டார். அப்பாவும் தன் அறைக்குள் சென்று விட்டார்.
வீட்டில் நிசப்த்தம் நிலவியது. மெதுவாக  மீண்டும் அம்மாவிடம்    வந்தால் அமுதா. "அம்மா... வலிக்கிது மா".. என்று அழுதுகொண்டே கூறினாள். "ஆமாம்.. இப்படி  கூப்பிட்ட உடனே விழுந்து அடிச்சி ஓடினா  அப்படித்தான் வலிக்கும். உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?" என்று திட்டினாள் அமுதாவின் அக்கா கவிதா.


 "இல்ல அக்கா... கூப்பிட்ட உடனே போகலான அப்பா அடிப்பார். என்னால வலி தாங்க முடியாது.
நேற்றைக்கு கால்ல வச்ச சூடு இன்னும் வலிக்கிது... 
 என்னலே தாங்க முடியல. அப்பாவுக்கு கோபம் வந்தா இன்னும் அடிப்பார். அதான் அக்கா வேகமாப்  போனேன்" என்று அழுதுகொண்டே கூறினாள் அமுதா. "இப்படிச் சின்னப் பிள்ளைகளை மிரட்டி, அடிச்சி பயத்தினாலே  
கிடைக்கிற மரியாதையைத்  தான்உன் புருஷன் ஊரெல்லாம்  
பெருமையா நான் நல்லா புள்ள வளர்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு  
திரியிறாரு. ஆண்டவன் என்னைக்கு தான் இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பானோ" என்று மருமகனைக் கடிந்து கொண்டாள் பாட்டி.  
அதைக் கேட்டவுடன் அமுதா " பாட்டி... எங்க அப்பாவைத் திட்டாதே.  
உன்னையா அடிச்சாரு? எனக்கு தானே சூடு வச்சாரு. பேசாம இரு". என்று பாட்டியை அதட்டினாள். "ஆமாம் இதுல  ஒன்னும்   
குறைச்சல்  இல்ல. இப்படியே  நீ  காலம்  முழுக்க  அடி வாங்கிகிட்டே  இரு "  என்று கூறினாள் பாட்டி. 
"பரவாயில்லை  நான் பாத்துக்கறேன்   என் அப்பாவைத் திட்டாதே".  
என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காயத்திற்கு மருந்து தடவினாள்  
அமுதா.  
பக்கத்து அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் கண்களின்  ஓரம் கண்ணீர்த் துளி கசிந்தது.  
தன் மகளின்  காலில்  தான்  வைத்த  சூடு இதயத்தில்  உரைத்தது  அவருக்கு!

~தமிழ் செல்வி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Post a Comment